வியாழன், நவம்பர் 10, 2011

ஷஹ்லா மஸூத் கொலை: சி.பி.ஐ கண்காணிப்பில் இரண்டு பா.ஜ.க தலைவர்கள்

masood
புதுடெல்லி:மத்தியபிரதேச மாநிலம் போபாலில் தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஷஹ்லா மஸூத் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பா.ஜ.க தலைவர்களைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்திவருகிறது. விசாரணைக்காக சி.பி.ஐயின் குழு ஒன்று போபாலில் தங்கியுள்ளது.
போபாலைச் சார்ந்த சி.பி.ஐ குழுவால் வழக்கில் போதிய முன்னேற்றத்தை அடைய முடியாததன் காரணமாக புதிய குழுவிடம் விசாரணை பொறுப்பை ஒப்படைத்திருப்பதாக சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டுவரும் இரண்டு பா.ஜ.க தலைவர்களில் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். ஷஹ்லா மஸூத் வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு தொடர்பிருப்பதாக கூறவது தவறு எனவும், இதற்கான ஆதாரம் இல்லை எனவும் சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி ஷஹ்லா மஸூத் தனது வீட்டிற்கு முன்னால் காரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கின் விசாரணையில் துப்பு துலங்காததால் குற்றவாளியை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் சி.பி.ஐ அறிவித்தது.
தகவல் அறியும் உரிமை ஆர்வலரான ஷஹ்லா மஸூத் பட்டப் பகலில் சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில் எவரும் தகவல் அளிக்க தயங்குவதன் பின்னணியில் ஏதோ மர்மமான காரணங்கள் இருக்கலாம் என சி.பி.ஐ கூறுகிறது. மாநில போலீஸாரின் விசாரணை தோல்வியை தழுவியதையடுத்து மாநில அரசின் கோரிக்கைக்கு இணங்க சி.பி.ஐ இவ்வழக்கின் விசாரணை பொறுப்பை ஏற்றுக்கொண்டது.